×

பல்லடம் அருகே 4 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருப்பூர்: பல்லடம் அருகே 4 பேர் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (49). இவர் தவிடு புண்ணாக்கு வியாபாரி. பொங்கலூர் மேற்கு ஒன்றியம் மாதப்பூர் பஞ்சாயத்து பாஜ கிளை தலைவராகவும் இருந்து வந்தார். இவரது தம்பி செந்தில்குமார் (47). மோகன்ராஜூக்கு சொந்தமாக அந்த பகுதியில் நிலம் உள்ளது. இந்தநிலையில் மோகன்ராஜ் கடந்த 3ம் தேதி இரவு அவருக்கு சொந்தமான இடத்துக்கு சென்றபோது அங்கு 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்தனர். இதனை மோகன்ராஜ் கண்டித்து அங்கிருந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் மோகன்ராஜ் வீட்டுக்கு வந்து தகராறு செய்து, மோகன்ராஜ் அவரது தம்பி செந்தில்குமார், மோகன்ராஜ் தாய் புஷ்பவதி (68), செந்தில்குமார் சித்தி ரத்தினாம்பாள் (59) ஆகிய 4 பேரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. இதுசம்பந்தமாக போலீசார் நடத்திய விசாரணையில், படுகொலையை செய்தது, நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்ற செல்வம் (27), அவரது நண்பர்களான திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து (24), தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த சோனை முத்தையா (22) என்கிற விசால் ஆகியோர் என்பது தெரியவந்தது.

இந்த நிலையில், கொலையில் தொடர்புடைய செல்லமுத்துவை கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான வெங்கடேஷ், சோனை முத்தையா ஆகியோர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். ஏற்கெனவே செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தேடப்பட்டு வந்த இருவர் சரணடைந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான வெங்கடேஷின் தந்தை ஐயப்பனை போலீசார் கைது செய்துள்ளனர்.

The post பல்லடம் அருகே 4 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Palladam ,Thiruppur ,Pallada ,Tiruppur District Palladam ,Dinakaran ,
× RELATED பல்லடம் பெரியாயிபட்டி கிராமத்தில்...